Thursday 19 August 2010

ஒரேருழவன் பதிவுகள்: ஐந்திணைத் தன்மை கொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்..!

ஒரேருழவன் பதிவுகள்: ஐந்திணைத் தன்மை கொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்..!

Sunday 25 July 2010

ஐந்திணைத் தன்மை கொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்..!

கல்லூரியில் ஒருநாள் தேனீர் இடைவேளையின்போது தோழி ஒருத்தி தன்னுடைய புதிய நோட்டுப்புத்தகம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள். அது ஐந்து பகுதிகளாகப் பகுக்கப் பட்டிருக்கும், தற்போது கடைகளில் பரவலாகவும் அதிகமாகவும் விற்பனையாகும் "5 சப்ஜெக்ட் நோட்". ஐந்து பகுதிகளையும் தனித்தனியாகப் பிரிக்கும் வண்ணம் அவற்றின் இடையே ஒரே வண்ணத்தில் தடிமனான அட்டைகள் புகுத்தப்பட்டிருக்கும். என் தோழி அந்த ஐந்து அட்டைகளிலும் ஒவ்வொரு கவிதைகள் எழுதித் தரும்படியும், அதை அவள் என் நினைவாக வைத்துக்கொள்ளப் போவதாகவும் கூறினாள்.

நான் சற்று வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தேன். "ஐந்து" என்றவுடன் எனக்கு அகத்திணைகள் ஐந்தும் நினைவுக்கு வந்தன. ஆகவே ஒன்று செய்ய முடிவெடுத்தேன். அகத்திணைகளின் கருப்பொருட்களைப் பெண்ணின் உடல், உள்ளக் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு எழுதினால் சரியாக இருக்கும், ஒரு பெண்ணாக என் தோழியும் மகிழ்ச்சி அடைவாள் என்று எனக்குத் தோன்றியது.

அகத்திணைகளுடன் தொடர்புடையது என்பதால் கொஞ்சம் மரபு சார்ந்து எழுதலாம் எனத் தோன்றியது, ஆனால் கொஞ்சம் படப்படப்பாகவும் இருந்தது. தப்பும் தவறுமாக எழுதிவிட்டால்? ஆகவே, அசை சீர் அடிகள் ஆகியவற்றில் பெரிய சாதனைகள் இல்லாவிட்டாலும், ஓசை நயமும் எதுகை மோனை நயமும் சிறிது புலப்படும் வண்ணம் ஐந்து கவிதைகள் எழுதினேன். இந்தத் தொகுப்புக்கு நான் இட்ட தலைப்புதான் இந்தப் பதிவின் தலைப்பு."ஐந்திணைத் தன்மைகொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்." படித்துவிட்டு, குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நிறை இருந்தால் பாராட்டுங்கள்.

1. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.

" குணத்தால் பொருப்பென வுயர்ந்து இலங்குபல்
கணத்தாள் குமரன் தண்ணிலந் தனையொத்து
சுணங்கா முகப்பசுமை தருக்களின் முருகையொக்க
மணங்கொள் கொன்றைபோல நகையுடை யாள்அணங்கு."

குறிப்பு: பல்கணத்தாள் குமரன் - முருகன் - குறிஞ்சி நிலத் தெய்வம்; பொருப்பு - மலை; தருக்கள் - மரங்கள்; கொன்றை - குறிஞ்சிநில மலர், முருகனுக்குரியது. அணங்கு - பெண்.

2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்.

"கானகத் தருக்களொத்த கனங்குழல் தன்னழகும்
மானழுக் காறுறும் குவளைமலர்க் கண்ணழகும்
பானிறக் கடலின்மிசை அரவணை கொண்டமாயோன்
வானுயர் அருளழகும் ஒருங்குடை யாள்அணங்கு."

குறிப்பு: கானகம் - காடு; மான் - முல்லைநில விலங்கு; பானிறக் கடலின்மிசை அரவணை கொண்டமாயோன் - பாற்கடலில் உறங்கும் திருமால் - முல்லைநிலத் தெய்வம்; அருள் - கருணை.

3. மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்.

"உழவ ரகழினும் நோற்கும் மூதூர்
யாழது செய்யும் இன்னிய மெல்லிசை
அழகிய நாரை தன்னுடை மடநடை
கழுநீர் மென்மை என்றிவை நான்கும்
நன்மனம் நல்லுரை மென்னடை யாக்கை
என்பன தன்னிற் கொண்டாள் அணங்கு."

குறிப்பு: உழவர் - மருதநில மக்கள்; அகழ்தல் - தோண்டுதல்; மூதூர் - மருதநில ஊர்ப் பெயர்; இங்கு நிலத்துக்கு ஆகுபெயராக வந்தது; யாழ் - மருதநில இசைக்கருவி; நாரை - மருதநிலப் பறவை - நேர்க்குறிப்பாக அன்றி, பிறிதுமொழிதலாக வந்தது; செங்கழுநீர் - மருதநில மலர்; யாக்கை - உடல்.

4. நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்.

" காகத் தூவி கனங்குழல் மேவத்
தாகம் தீர்க்கும் வருணன் செல்வி
வேகந் தன்னிற் சுறாவ தொக்கும்
அகத்திணை யைந்தும் உவப்பவள் அணங்கு."

குறிப்பு: காகம் - நெய்தல்நிலப் பறவை; வருணன் - கடலோன் - நெயதல்நிலக் கடவுள்; செல்வி - புதல்வி, மகள் - வருணனின் குணம் உடையவள் என்ற பொருளில் வந்தது; சுறா - நெய்தல்நில விலங்கு - செயல்வேகத்துக்கு உவமேயமாக வந்தது.

5. பாலை - முல்லையும் மருதமும் நிலையிற்றிரிந்து பாலைவனமானது.

"வழிப்பறிப் பவர்போல் மனம்பறி எயினி
இழியவை செய்யாள் உரத்திற் கொற்றவை
அழிவியற் செந்நாய் போன்றன எரிப்பாள்;
ஒழுக்கம் உயிரெனக் கொண்டவள் அணங்கு."

குறிப்பு: வழிப்பறித்தல் - பாலைநிலத் தொழில்; எயினியர் - பாலைநிலப் பெண்கள்; 'மனத்தைக் கொள்ளை கொள்பவள்' என்ற பொருளில் வந்தது; கொற்றவை - பாலைநிலத் தெய்வம்; உரம் - வீரம்; செந்நாய் - பாலைநில விலங்கு.

நன்றி.
என்றும் தோழமையுடன்,
ருத்திரன்மகன் இவன் பைரவன்.

Wednesday 12 May 2010

பெண்மையே உன்றன்முன்னே...

கல்லூரிப்பருவத்தில் பலருக்கும் இருக்கும் கவிதை எழுதும் விருப்பம் - அதுவும் காதல் கவிதை எழுதும் விருப்பம் எனக்கும் இருந்தது. எழுத ஆரம்பித்தது என்னவோ முதுகலைப்படிப்பின்போது தான், ஏனெனில் அப்போதுதான் படிப்புக்கப்பாற்பட்டு பெண்களுடன் பழகும் முதல் வாய்ப்பு நேரிட்டது (எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை, இன்றுவரை!). "நீ நன்றாக கவிதை எழுதுவாய் என்று நினைக்கிறேன்" என்று சொன்ன தோழியில் இருந்து, "அவன் எழுதுவானாயிருக்கும், யாருக்குத் தெரியும் எந்தப் புற்றில் எந்தப் பாம்புன்னு, என்னடி?" என்று கேலியாகக் கூறிய அந்தத் தோழி வரைக்கும் எண்ணை எழுதத் தூண்டியவர்கள் பலர்.

"எழுதித்தான் பார்ப்போமே!" என்று எண்ணத்தொடங்கியபோது தான் பார்க்கும் எல்லாவற்றைப்பற்றியும் கவிதை எழுதத் தோன்றியது. அந்த நேரத்தில் தான் வைரமுத்து, வாலி முதல் அறிவுமதி, யுகபாரதி, தாமரை, தபூ சங்கர்,வரை எத்தனையோ கவிஞர்களைப் படிக்கத் துவங்கினேன். எதில் பார்த்தாலும் கவிதை ஒளிந்திருப்பதாகப் பட்டது. ரோட்டோரமாக பூ விற்கும் பெண், ஒற்றைக்கையில் டவுசரைத் தூக்கிப் பிடித்தபடி டயர் ஓட்டும் சிறுவன், அவன் பின்னாலேயே ஓடும் அவனது நாய், இன்னும் எத்தனையோ.

ஆனால் துவக்கம் முதலே எனக்குத் தயக்கம் இருக்கத்தான் செய்தது. நானே பலமுறை கவிதை எழுதுவதை விமர்சித்திருக்கிறேன், கண்டித்திருக்கிறேன். "பிளாட்டோவைப் படித்திருக்கிறோம்" என்ற ஒரே காரணத்துக்காக, "கவிஞர்களையும் கவிதைகளையும் புறக்கணிக்க வேண்டும்" என்பேன். "அவர்கள் எல்லாம் பொய்யர்கள்" என்பதும் உண்டு, அதே பிளாட்டோவைக் கடன்வாங்கிக் கொண்டு. ஆனால் தமிழிலக்கியம், தமிழ்க்கவிதைகள், மரபுக்கவிதைகளை மட்டும் பிடிக்கும். முரண்பட்டதாக இல்லை?

புதுக்கவிதைகளோ நவீன கவிதைகளோ பிடிக்காமல் இருந்த எனக்கு அவற்றின்மீது ஈர்ப்பு ஏற்பட்டதே ஒரு அசாதாரணமான திருப்பம். ஒருமுறை அடிக்கடி கவிதைகள் எழுதும் என் தோழி ஒருத்தி தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு கவிதை தொகுப்பைக் கொடுத்தாள். அதன் பெயர் "கொலுசுகள் பேசக்கூடும்" என்பது. எழுதியது ஒரு திரைப்பட இணை இயக்குனர் - பெயர் மறந்துவிட்டது. அதை வாங்கிப் போய் இரவுமுழுவதும் ஒருவரி கூட விடாமல் படித்தேன் (அதை நான் அடுத்தநாளே திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது என்பது வேறுவிஷயம், ஏனெனில் அவளே அதை தன்னுடைய வேறொரு தோழியிடம் இருந்து இரவல் வாங்கியிருந்தாள்). நன்றாகத்தான் இருந்தது. அதுவரை நான் படித்திருந்த ஒரே காதல் கவிதைத் தொகுப்பு அதுதான். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாகத் தோன்றியது.

கவிதைகளை மிகச் சிறந்த முறையில் விமர்சனம் செய்யுமளவுக்கு நான் அப்போது இலக்கியம் படிக்கவில்லைதான் - இருந்தாலும் ஒரு சராசரி ஆடவனுக்கு அவை போதும். அந்தக் கவிதைகளில் இருந்த காதலன் அந்த இணை இயக்குனர் இல்லை - ஒவ்வொருவரும். நான், அவன், இவன் எனப் பெரும்பாலான இளம் ஆண்கள். வசந்தபாலன் திரைப்படங்களில் வருவார்களே - அப்படி. படிக்க படிக்க என்னையே நான் அவனில் கண்டேன், தொலைந்தேன் எனக்கூடச் சொல்லலாம். தொலைக்காட்சிக்குள்ளும் கணினித்திரைக்குள்ளும் சுருங்கிவிட்ட இன்றைய உலகில் ஒரு ஆடவன் தன் காதலைச் சொல்லச் சிலப்பதிகாரம் தேவையில்லை - ஒருவரிக் கவிதை போதும்.

ஆனால், எழுதும் எழுத்தில் சிறிதாவது முதிர்ச்சி இருக்க வேண்டுமே? "அதோ பாரு ஆயா, ஆட்டுக்காலு பாயா" என்று எழுத உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கொட்டிக்கிடக்கின்றனர். வயதுக்கும் படிப்புக்கும் ஏற்ற முதிர்ச்சி இருக்கவேண்டும் என்று விரும்பினேன். "வார்த்தையில் விளையாட வேண்டும், எளிமையாக இருக்கவேண்டும், கொஞ்சமாவது எதுகை-மோனை இருந்தால் தான் தரை டிக்கெட்டுகளுக்கு அது கவிதை போல் தெரியும்" என்று பலவாறாக எண்ணிக்கொண்டு, பாரதியாரையும் பாரதிதாசனையும் விழுந்து விழுந்து மாய்ந்து மாய்ந்து படிக்கத் துவங்கினேன். எங்கள் நூலகத்தில் இருந்த "பாரதியார் கவிதைகள்" நூல் நூலக அடுக்கில் இருந்ததை விட எனது புத்தகப் பையிலும், ஷெல்பிலும்தான் அதிகமாக இருந்தது. இடைவேளை ஒன்று விடக்கூடாது, உடனே புத்தகத்தை எடுத்துக் கொண்டு "கண்ணம்மா"வைத் தேடப் போய்விடுவேன். ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதாகத் தான் அமைந்தது, "பாஞ்சாலி சபதம்" போன்ற அவரது சிறந்த பல படைப்புகளை நான் படிக்காமலே போயிருந்திருப்பேன் - எவ்வளவுதான் துவக்கம் முதலே அவர்மீது ஈர்ப்பும் மதிப்பும் இருந்தபோதிலும்.

அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய பல கவிதைகளில் சந்தமும் எதுகைமோனையும் கோலோச்சும். திருக்குறளை வேறு படித்துவைத்துக் கொண்டு, அதிலிருந்து சொற்களைப் பயன்படுத்துவது (எப்பூடி? நாங்க யாரு தெரியும்ல...). குறுந்தொகை, அகப்பாடல்கள் என எதையும் விடுவதில்லை. "யாயும் ஞாயும்" என்பதைப்போய் வகுப்புத் தோழிகளிடம் ஸீன் போடுவது - என் மாணவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. அப்படி ஒருநாள் நான் எழுதியது தான் கீழே வரும் பாடல். "பையன் சமர்த்தாக குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறான்" என்று விரிவுரையாளர் எண்ணிக்கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த துண்டுச் சீட்டில் மலர்ந்த காதல் கவிதை அது. புதுக்கவிதையானாலும், பாரதியாருடையவை யாப்பிலக்கணத்துக்கு உட்பட்டவை. இதில் அப்படி எதையும் பார்க்க முடியாது, ஆனாலும் ஓசை நயம் நன்றாக இருக்கும், பாருங்களேன்.

பெண்மையே உன்றன்முன்னே...

சோதிமுகங் கண்டிடவே - என்றன்
உள்ளமலை பாயுதடி!
பாதியடி என்னுயிரில் - உன்றன்
கள்ளநகை கண்மயக்க
மோதியடிக் குதென்மனம் - உன்னைக்
கண்டவி நாடியிலே;
ஓதிக்கொண் டேயிருந்தேன் - உன்றன்
வண்ணமுறு பேர்தனையே.

அண்மையில் நீயிருந்தால் - கண்ணே
அகிலமும் மறந்துபோனேன்;
பெண்மையே உன்றன்முன்னே - செல்வஞ்
சகலமு மொன்றுமில்லை.
தண்மையாய் நீயுகுக்கும் - அந்தத்
தேன்சுவைச் சொற்களுக்கே
உண்மையா யண்டத்திலும் - நிகர்
இன்சுவை யமிழ்தமில்லை.

சேணுல கேட்டுகின்றேன் - உன்றன்
கைதொடும் நிமிடங்களில்;
வேணுகோ பாலனைப்போல் - நின்றன்
வெட்கம் பருகுகின்றேன்.
நாணுதல் உன்சிறப்பு; - சசியைக்
காண்கிறே னுன்முகத்தில்;
வாணெடுங் கண்ணழகே! - உனைக்
காண்தொறு மின்பமடி.

பொற்சிலை யுன்றன்மேனி; - அழகுக்
கண்டமது சங்குமலர்;
சிற்சில முத்துதிரும்; - கோவைச்
செவ்வாய் நீதிறக்க.
காற்சலங் கையஞ்சிடும்; - தேவி
பாதங்கள் பூமிதொட;
அர்ப்பண மென்றனாவி - என்னை
யாளுமுன் அன்பினுக்கே.

சற்றே கண்ணயர்வேன் - உன்றன்
தீங்குரல் கானத்துடன்;
பொற்றேர் மேனியுடை - மெல்லிய
பஞ்சுபோன் மடியின்கண்ணே.
கற்றைக் குழல்கோதி - அன்புத்
தாதைநா னாகிடுவேன்;
அற்றைத் திங்களினில் - ஆசைக்
காதலனா னாகிடுவேன்.

Friday 16 April 2010

சாதலும் சாதல் நிமித்தமும்

கல்லூரியில் இருந்தபோது ஏறக்குறைய அனைவரையும் போல நானும் கவிதை எழுத முயன்றதுண்டு. ஆனால் அவை அனைத்தும் வழக்கம் போல எல்லாரும் எழுதும் காதல் கவிதைகளாகத்தான் இருந்தன, நான் எனது சமூகக் கடமைகளைச் சரிவர உணரும்வரை.

எனது முதுகலைப் படிப்பின் பிற்பகுதியில்தான் நான் அதிகமாகச் சமூக ஆர்வம் கொண்டவனாகக் காணப்பட்டேன். அதுவரை, குருதிக்கொடை கூட என்.எஸ்.எஸ்.-இல் கிடைக்கும் பத்து அல்லது பதினைந்து கிரெடிட்டுக்காகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், கூட இரண்டோ மூன்றோ கிரெடிட் கிடைக்கும் என்றால், ஒரே வாரத்தில் மூன்று முறை கூட ரத்தம் கொடுக்கக் கூடத் தயாராக இருப்போம். ஒரு வாரம் என்ன - ஒரே நாளில் இரண்டு முறை குருதிக்கொடை கொடுத்த பிறவிகள் கூட உண்டு!

ஆனால், சட்டென்று ஞானோதயம் பிறந்துவிட்டதால் அல்ல, நெடுநாள் மனதுக்குள் பூட்டியே வைத்து இருந்த என் சமூக ஆர்வத்தை வெளிப்படுத்த எனது டீக்கடை நண்பர்கள் வாய்ப்புக் கொடுத்தபோதுதான். வெளியுலகத்துக்கும் அங்கு மினிபஸ் பிடிக்க நிற்பவர்களுக்கும் அவர்கள் டீக்கடைத் திண்ணையில் அமர்ந்துகொண்டு அரட்டை அடிப்பவர்கள் தான் - நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டு இருந்தேன், அந்த முதல் மனிதச் சங்கிலிப் போராட்டம் வரை. இலங்கையில் அப்போது நடந்துகொண்டிருந்த இனவெறிப்போரைத் தடுத்து
நிறுத்தக் கோரியும், இந்திய அரசு அனுப்பிக்கொண்டிருந்த ஆயுத - இராணுவ உதவிகளை உடனே நிறுத்தக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டம் அது.

அது மட்டும் அல்ல, மனித உரிமைகளுக்கு எதிரான எந்த ஒரு உணர்வுகளையும் மனதுக்குள்ளேயே வைத்திருக்க மட்டுமே பழகிய என்னை வீதியில் இறங்கிப் போராடத்தூண்டியது முத்துக்குமார் என்ற சென்னை இளைஞனது உயிர்த்தியாகம்தான். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் உயிர்ப்பந்தமாகச் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன் அவன் "ஈழம் வெல்க!" என்ற கோஷத்துடன் அவன் தரையில் சாய்ந்ததைத் தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. பகல்களிலும் இருண்டிருந்த தமிழகத்துக்கு ஒளியூட்டுவதற்காக தன்னையே தீப்பந்தமாக்கிய தமிழ்ப் போராளி. அவன் ஈழத்தைச் சேர்ந்தவனல்ல, ஆனாலும் எல்லா மனிதரையும் தன் சகோதரர்களாகப் பாவிக்கும் மனது அவனுக்கு இருந்தது. பிறர் துயரைத் தன் துயராக எண்ணும் பெருந்தன்மை இருந்தது. தன் சகோதரர்களின் இரத்தம் காரணமின்றிச் சிந்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டும் காணாதது போலப் போய்க்கொண்டிருந்த தமிழகத்தையும் அதன் மெத்தனத்தையும் எதிர்க்கும் துணிவும் ஆத்திரமும் இருந்தது. பாரதியின் வரிகளில் இருந்த ரௌத்திரத்தை அவன் பழகியிருந்தான்.

இறக்கும் முன் அவன் எழுதி, உழைக்கும் வர்க்கத்தினர் உள்ளிட்ட தமிழ் மக்களிடம் கையளித்துச் சென்ற அவனது உயிர்ப்புமிக்க மரணசாசனம், யாரையும் வீதியில் இறங்கிப் போராடத் தூண்டும். சோம்பிப்போய் உட்கார்ந்திருந்த தமிழகத்தின் இளைய தலைமுறையிடம் அவன் கேட்ட இறுதி ஆசை, ஒவ்வொரு சொட்டு இளம் ரத்தத்தையும் கொதிக்க வைத்தது. வீட்டுக்கு ஒரே மகனான அவன் செய்யும்போது, நமக்கென்ன குறை என்று ஒவ்வொரு மாணவனையும் அது எண்ண வைத்தது. அதுதான் என்னையும், முன் எப்போதும் இல்லாத விதமாக, என்னால் இயன்றவரை, என்னுடன் இருந்த மாணவர்களின் உதவியாலும், அவர்களின் வலிமையைக் கொண்டும் இது போராட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தூண்டியது.

அந்தக் காலகட்டத்தில், எத்தனையோ மனிதச்சங்கிலிகள், ஊர்வலங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், தர்ணாக்கள் என நடத்தினோம். பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். கையெழுத்து இயக்கங்கள் நடத்தினோம் - தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரிடமும் பேசினோம். எங்கள் வாராந்திர வான்குழுக் கூட்டங்களில்கூட இதை பற்றி அதிகம் பேசி, மாணவ சமுதாயத்திடையே விழிப்புணர்வைக் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

அந்தக் காலகட்டத்தில்தான் "காதலும், காதல் நிமித்தமும்" என்ற எனது கவிதைக் கண்ணோட்டம், இலக்கியத்தின் மற்றொரு முகமான சமூகக் கடமைகளை நோக்கி என் கவனம் திரும்பியது. ஈழக் கவிஞர்கள் மட்டும் இல்லாமல், இன்னும் பல சமூக ஆர்வம் கொண்ட கவிஞர்களின் படைப்புகளைப் படிக்கத் துவங்கினேன். போராட்டங்களில் பேசும்பொது உணர்ச்சியைப் பெருக்க உதவும் என்ற நானும் கவிதைகள் எழுதத் துவங்கினேன். அவ்வாறு எழுதத் துவங்கியதன் விளைவாக எழுந்த என் முதல் குழந்தை இந்தக் கவிதை. இது பொதுக்கூட்டங்களிலும், நண்பர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஈழ விடுதலையின் அவசியம் குறித்த என் கருத்துக்களை எளிதில் பதிவு செய்யும் ஊடகமாக அமைந்தது.

படித்துவிட்டுப் பிடித்திருந்தால் (பிடித்திருக்காவிட்டாலும்) உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், மறக்காமல்.

சுருதிபேதமும் சாக்காடும்

வெடிக்கும் துப்பாக்கிகளின்

ஒலியும்

குண்டுகளின் ஒலியும்

சற்றே ஒரு வினாடி ஸ்தம்பிக்கின்றன.

"வீல்!" என்ற அழுகையுடன்

தூக்கம் கலைகிறது,

அகதிகள் முகாமில்

எங்கள் கண்ணீரில் நனைந்த

தரையில் அதுவரை

தூங்கிப்போயிருந்த குழந்தை.

ஆம், இப்பொழுதெல்லாம்

எம் குழந்தைகளுக்குத்

தாலாட்டுப் பாடல்களை விட,

வெடிச்சத்தங்களின் சுருதிபேதம்

அவ்வளவு அத்துப்படி.

இதேபோன்ற ஒரு வெடிகுண்டுக்குத் தன்

இன்னுயிரைப் பரிசளித்து

வாடிய பூப்போல் அருகில் கிடந்த

தன் தோழியைப் பார்த்து

நெற்றி சுருக்குகிறது:

"இவள் ஏன் விழிக்கவில்லை?"

"குழிகளுக்குள்தான் செடிகள்

நடுவதா அம்மா?"

பாவம், மனிதர்கள் மறைந்துகொள்ளும்

பதுங்கு குழிகளைத் தவிர

வேறெதை அது பார்த்திருக்கிறது?

வேனிற்கால மரங்களையும்

செடிகளையும் அலங்கரிக்கும்

பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகள்

எங்கள் காதுகளுக்குக் கேட்பதில்லை.

அவை மிக மிக நுண்ணியவையாயிற்றே?

வெடிமருந்தின் வாசனையோ,

மலர்களின் நறுமணத்தைத்

தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது.

அன்பு, மகிழ்ச்சி, பாசம்

காதல், நன்றி, ரௌத்திரம் -

இவைகூட நுண்ணிய உணர்வுகள்தாம்.

எங்கள் இதயங்கள் இவற்றுக்கு

மரத்துப் போகும்முன்னாவது

போரை நிறுத்துங்களேன்...!